நம் முன்னோர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர் என்பது நம் நம்பிக்கை.
இலக்கியங்கள் முதல் இன்றைய மேடைப் பேச்சாளர்கள் வரை நம் மனதில் ஏற்படுத்தி இருக்கும் காட்சியும் அதுதானே!
உயர் நிலைப் பள்ளியில், தங்கத் தோட்டை வீசி தானியம் உண்ண வந்த கோழியை விரட்டிய பாடல் காட்சியைப் படித்தபோது ’ஆஹா’ என்று நீங்கள் நினைக்கவில்லையா?
என் விதண்டாவாத நண்பர் அண்மையில் ஒரு கேள்வி கேட்டு அந்த ’ஆஹா’வைக் கெடுத்தார். நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா? என் பங்குக்கு இதோ!
அவர் கேட்ட கேள்வி இதுதான். ”ஒரு கோழி சாப்பிடும் நெல் என்ன பெறும்? அதக் காப்பாத்த தோட்டை விட்டெறிஞ்சாங்கன்னா, அந்த நெல்ல அவங்க தோட்டவிட அதிகம் மதிச்சாங்கன்னு தானே அர்த்தம்? அப்ப அவங்க வாழ்ந்தது, பசியும் பட்டினியுமான வாழ்க்கையா? இல்ல செல்வச் செழிப்பான வாழ்க்கையா?”
அதுதானே? கொஞ்சம் யோசித்தபோது, நம்மிடையே காலங் காலமாக நிலவி வரும் - பிற சமூகத்தினரிடம் இல்லாத - சில பழக்கங்கள் நம் முன்னோரின் வாழ்க்கை நிலை குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன என்று தோன்றியது. ஒரு வகையில் அவை நமது வரலாற்றின் எச்சங்கள் என்பது எனது ஊகம். சில எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன்.
1. யாரிடம் பேசத் தொடங்கினாலும், ’நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டுத் தொடங்குவது உலக வழக்கம். தமிழர்கள் இருவர் பேசிக் கொண்டால், ’சாப்பிட்டாச்சா?’ என்ற கேள்வி தவறாமல் இரண்டாவதாக வரும். பல சமயங்களில், அந்தக் கேள்வியைக் கேட்குமுன் இது சாப்பாட்டு நேரமா என்று கூட யோசிக்க மாட்டோம். எனக்குத் தெரிந்த வரை இந்த வழக்கம் வேறு மொழி மக்களிடம் இல்லை.
பலர், குறிப்பாக கிராமத்து மக்கள் மூன்றாவது கேள்வி ஒன்றையும் கேட்பார்கள். அது ’அங்கெல்லாம் மழை பெய்ததா?’ என்பது. என் அம்மா கூட அப்படித்தான் தொலைபேசியில் கேட்பார். ஏன், ஏர் உழ ஆளைக் கூட்டிக்கிட்டு வரப் போறீங்களா? என்று நான் கிண்டல் செய்வதுண்டு.
இப்போது ஒரு வேளை இந்த வழக்கம் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால், என் சிறு வயதில் வேற்று ஊர்க் காரர்கள் யாரைக் கண்டாலும், எங்கள் ஊர்ப் பெரியவர்கள் இந்த மூன்று கேள்விகளைக் கேட்காமல் விட மாட்டார்கள்.
இரண்டாவதாக, சமைத்த பாத்திரத்தை இரவில் காலியாக வைக்கக் கூடாது என்ற வழக்கம். பெரும்பாலான கிராமத்து வீடுகளில் இரவு, மறுநாள் காலை, மதியம் ஆகிய மூன்று வேளைகளுக்கும் சேர்த்து மாலையில் மட்டும்தான் சமைப்பார்கள். அதனால் சமைத்த பாத்திரம் காலியாக இருக்காது.
ஆனால், எப்போதாவது சாப்பாடு மீந்து போகாத சூழ்நிலை ஏற்பட்டால், ஒரு நான்கைந்து பருக்கைகளையாவது பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வைப்பார்கள்.
மூன்றாவதாக, பகலில் பிச்சை கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொன்னாலும், கிராமத்தில் இரவில் பிச்சை கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். ’ராப்பிச்சைக்கு இல்லைன்னு சொல்லக் கூடாது’ என்று ஒரு பல மொழிபோல சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
இவை, காலங்காலமாக பசி - பட்டினியால் அவதியுற்ற ஒரு இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
இந்த விளக்கம் உங்களுக்குச் சரி என்று தோன்றவில்லையா?
நல்லது.. திருமணப் பந்தி தொடங்கி தானே பரிமாறிக் கொள்ளும் நவீன விருந்துகள் வரை நம் மக்களில் படித்தவர்கள் / வசதியானவர்கள் கூட எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்..
நாம் கடந்து வந்த பாதை உங்களுக்குப் புரியலாம்.
No comments:
Post a Comment